போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மண்டல துணைத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மண்டலப் பொதுச் செயலர் வெள்ளைத்துரை ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். வேலைப் பளுவை உயர்த்தும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி, விடுப்பு சம்பளம், தையல் கூலி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மண்டல உதவித் தலைவர் பாலசுப்பிரமணியன், சம்மேளன செயலர் வாசுதேவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். மண்டலப் பொருளாளர் கார்மேகம் நன்றி கூறினார்.