விருதுநகரில் பெண்கள் சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை

விருதுநகர், சிவன் கோயில் தெருவில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிய பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக

விருதுநகர், சிவன் கோயில் தெருவில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிய பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதை உடனே திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் நகராட்சி 21ஆவது வார்டுக்குள்பட்ட பகுதியில் சிவன்கோயில் தெரு உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், கிருஷ்ணமாச்சாரி சாலையில் உள்ள பொது கழிப்பறையை ஏற்கெனவே பயன்படுத்தி வந்தனர். அந்தக் கழிப்பறை பழுதானதையடுத்து நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால், பெண்கள் அவதியடைந்து வந்தனர். எனவே, இப்பகுதியில் புதிய கழிப்பறை கட்டித் தர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
 இதையடுத்து, விருதுநகர் மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு முன்பு நவீன முறையில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இது திறக்கப்பட வில்லை. இதனால், பெண்கள் மீண்டும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதால் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு ஏற்கெனவே பொது மக்கள் மனு அளித்தனர். ஆனாலும் இதுவரை இவ்வளாகம் திறக்கப்பட வில்லை. எனவே, பெண்கள் சுகாதார வளாகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com