வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளரே இம்முறையும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சீமான் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு காளிமுத்து நினைவிடத்தில் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளரே மீண்டும் போட்டியிடுவார். வேலூரில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.
நாட்டை ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் கூட தேசிய மொழிகளுக்கு அங்கீகாரம் கொடுத்தனர். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் இந்திக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அழிந்து போன சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். அழிந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
திமுகவில் வாரிசு அரசியல் இல்லையென்றால் தான் வியப்பு. அக் கட்சிக்குள் யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக தான் வாரிசுகளுக்கு பதவி கொடுக்கின்றனர் என்றார்.
பின்னர், விழாவை யொட்டி நினைவிடத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.