சிவகாசி அரசு மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறு நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருவதாக தலைமை மருத்துவர் டி.அய்யனார் கூறினார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் வேலை செய்தால்தான் , உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேறும். மனிதனின் உடலில் உப்புச்சத்து அதிகமாகிவிட்டால், சிறுநீரகம் வேலை செய்யாது. இதனால் மூச்சுத்திணறல், வயிறு வீங்குதல் என உடல்நிலை பாதிக்கும்.
சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை மட்டும் போதாது. ரத்தத்தை சுத்திகரித்துவிட்டால், நோயின் தாக்கம் குறைந்து நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கலாம். இதுவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகள், விருதுநகர்அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்தம் சுத்திகரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வசதி சிவகாசி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு ரத்தத்தை சுத்திகரிக்க 4 மணி நேரமாகும்.
இந்த இயந்திரம் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள ரத்தத்தை முழுவதும் , எடுத்து , அதனை சுத்தகரித்து நல்ல ரத்தமாகமாற்றி மீண்டும் நோயாளியின் உடலினுள் செலுத்திவிடும். இதன் மூலம் நோயாளிகள் சிறுநீரக கோளாறுக்கு உடனடி நிவாரணம் பெறலாம்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டன் கீழ் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றார்.