ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேரு யுவ கேந்திரா இயக்குநர் சடாச்சரவேல் பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஒரே நாடு, ஒரே மொழி என்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என அறிவித்துள்ளது. ஆனால், தமிழகமும், கேரளாவும் ரேசன் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்குகின்றன. இதை பிகார், உத்தரபிரதேசம் மாநிலங்களுடன் சேர்த்து பார்க்க தேவையில்லை.
ஜிஎஸ்டி திட்டம் எப்படி அவசர, அவரசமாக கொண்டு வரப்பட்டதோ, அது போன்று இந்த திட்டத்தையும் அறிவித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, இத்திட்டத்தில் தமிழக அரசு சேரக் கூடாது. நாடாளுமன்றத்தில் பிற கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க மறுக்கின்றனர். பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது தமிழக மக்களவை உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பிற மாநில காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து எதிர்ப்போம் என்றார் அவர்.
அப்போது, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.