விருதுநகரில் பொதுமக்களிடம் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவத்தில் இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக, மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
விருதுநகரில் மதுரை சாலை லட்சுமி நகர் பகுதியில் தனியாக வருபவர்களை வழி மறித்து ஒரு கும்பல் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் தங்கும் விடுதி அருகே அஜீத் என்ப வரிடம் செல்லிடப்பேசியை சிலர் பறித்து சென்றனர்.
இது குறித்த வழக்கை தனிப்படை சார்பு ஆய்வாளர் அன்புதாசன் தலைமையிலான போலீஸார் விசாரிக்க உதவி காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவிட்டார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (24) என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றதை ஒப்பு கொண்டாராம்.
இதையடுத்து அவரிடமிருந்த 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.