விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக சாத்தூர் நகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சாத்தூர் அருகே படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(34). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த செந்தில், மோகன், அஜித் உள்ளிட்டோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் முத்துப்பாண்டி அண்ணா நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த செந்தில், அஜீத், மோகன் ஆகிய மூவரும் முத்துபாண்டியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முத்துப்பாண்டியின் மகன் முத்து காளிராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே மோகனின் ஆட்டோவை எரித்த வழக்கில் முத்துப்பாண்டி சிறைக்குச் சென்று அண்மையில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.