சாத்தூர் அருகே சிலோன் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி ஊராட்சியில் உள்ளது சிலோன்காலனி. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வாருகால் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை சேதமடைந்துள்ளன. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் குடியிருப்புகள் அருகே தேங்கி நிற்கிறது.
இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர்தொட்டியும் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் வீடுகள் தனி நபர் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த கழிப்பறையும் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் வாருகால், குடிநீர்தொட்டி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.