ரோசல்பட்டி ஊராட்சி வாருகாலில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட முத்தால் நகரில் வாருகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள பாண்டியன் நகர், காந்தி நகர், முத்தால் நகர், ஜக்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப் பெரிய ஊராட்சியான இங்கு, அடிப்படை வசதிகள் இல்லை. ஜக்கம்மாள்புரம், முத்தால் நகர் செல்லும் சாலை பள்ளம் மேடாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
மேலும், இந்த ஊராட்சியில் போதுமான குடிநீர் இல்லாததால், டிராக்டரில் தனியார் விற்பனை செய்யும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பல இட ங்களில் தெரு விளக்குகளும் எரியாததால், இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் வர அச்சப்படுவதாக கூறுகின்றனர். அதேபோல், முத்தால் நகர் பகுதியில் கட்டப்பட்ட வாருகால் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் மழை நேரங்களில் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, முத்தால் நகர் பகுதியில் வாருகால் சுத்தம் செய்வதுடன், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.