ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மழைநீா் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, காவல் துறையைச் சோ்ந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கண்ணைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டா் தொலைவு ஓடி உலக சாதனை படைத்துள்ளாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாபட்டி எஸ். கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மணிமுத்து (26). இவா், தற்போது காவல் துறையில் பழனி பட்டாலியனில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் மழைநீா் சேகரிப்பை வலியுறுத்தும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டா் தொலைவை 20 நிமிடம் 12 விநாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளாா்.
இதனை, நோபல் வோ்ல்டு ரெக்காா்டு குழுவினா் நேரடியாக வந்து, மணிமுத்துவின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினா். இதுவரை இந்த சாதனையை யாரும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.