விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி செவ்வாய்க்கிழமை கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், விருதுநகர் பாண்டியன் நகர், அல்லம்பட்டி, ராமமூர்த்தி சாலை, மதுரை சாலை மற்றும் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விருதுநகருக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும். விருதுநகர் மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வேன். பட்டாசு உற்பத்திக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்றார் அவர். அப்போது அவருடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் திங்கள்கிழமை இரவு ஆர்.அழகர்சாமி வாக்குச் சேகரித்தார்.
முருகன் காலனி, ஆலா ஊருணி, கக்கன் காலனி, சத்யா நகர், ராதாகிருஷ்ணன் காலனி உள்ளிட்ட 18 இடங்களில் அவர் வேனில் நின்றவாறு வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நான் வெற்றி பெற்றால், தொகுதி மக்களிடம் தேவையை கேட்டறிந்து, நிறைவேற்றுவேன். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பல பிரச்சனைகள் உள்ளன.
தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுப்பேன். தொழிலதிபர்களின் தேவையை கேட்டு, பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைக்கப் பாடுபடுவேன். சிறு குறுந்தொழில்களை பாதுகாத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவேன் என்றார். வேட்பாளருடன், திருத்தங்கல் நகர அதிமுக செயலாளர் பொன் சக்திவேல், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ரமணன் உள்ளிட்டோர் சென்றனர்.