விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கோட்டூர் செல்லும் வழியில் பொம்மையாபுரத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் அனுமதி பெற்ற இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை மாலையில் தொழிலாளர்கள் மணி மருந்து கலவையில் ஈடுபட்டனராம். அப்போது மணி மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் அங்குள்ள 3 அறைகள் சேதமடைந்தன. அதில், பணியில் ஈடுபட்டிருந்த போடம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கடவுள் (40) என்பவர் தீக்காயமடைந்தார். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கிய திருத்தங்கல் பனையடிபட்டியைச் சேர்ந்த ரூபன் (42), அ.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (60), போடம்பட்டியைச் சேர்ந்த மதுரைவீரன் (36) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.