விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டியில் கல்லூரி மாணவி கிணற்றிலிருந்து சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டார்.
பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லான் (50). இவர், அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கலாராணி(18), அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கலாராணி தனது நண்பர் ஒருவருடன் ஞாயிற்றுக்கிழமை அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை, பக்கத்து வீட்டினர் அவரது பெற்றோரிடம் கூறிவிட்டனராம். இது தொடர்பாக, கலாராணியின் வீட்டில் பிரச்னை எழுந்துள்ளது.
அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கலாராணியை காணவில்லையாம். எனவே, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். திங்கள்கிழமை அருகிலுள்ள கிணற்றில் கலாராணியின் சடலம் மிதந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், காவல் துறையினர் மற்றும் தீயணைக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், அவர்கள் கிணற்றிலிருந்து கலாராணியின் சடலத்தை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.