அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மழையில் நனைந்தபடி எம்.எல்.ஏ உள்ளிட்ட திமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத்தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அருப்புக்கோட்டையில் திமுகவினரின் இருசக்கர வாகனப் பேரணி நேரு மைதானத்தில் தொடங்கியது. சுமார் 1000-க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்களில் திரண்ட திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேரணியாகப் புறப்பட்டபோது, திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
பேரணிக்குத் தலைமை வகித்த திமுக எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மழையில் நனைந்தவாறு திறந்த நிலை வாகனத்தில் புறப்பட்டார். முன்னாள் அருப்புக்கோட்டை நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றியத் தலைவர் கே. கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ், திமுக நகரச் செயலாளர் ஏ.கே.மணி உள்ளிட்டோரும் அவருடன் சென்றனர். மழையில் நனைந்தவாறே விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்குஆதரவாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வாக்கு சேகரித்துப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நகரின் நேரு மைதானம், தெற்குத்தெரு, புளியம்பட்டி, பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம் வழியாக நெசவாளர் காலணி மற்றும் கைலாச ஊருணி ஆகிய பகுதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் நேரு மைதானத்தில் முடிவடைந்தது.
விடாத மழையிலும் விடாமல் தொடர்ந்து மழையில் நனைந்தவண்ணம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணிக்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டது பொதுமக்களை வியப்படைய வைத்தது.