விருதுநகரை குப்பையில்லா நகராக மாற்ற குப்பைத் தொட்டிகளை அகற்றிவிட்டு, ஊழியர்களே குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சியில் 5 துப்புரவு ஆய்வாளர்கள், 4 மேற்பார்வையாளர்கள், 87 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 47 துப்புரவுப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். விருதுநகரில் உள்ள 5 மண்டலங்களில் சேரும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வந்தனர். மேலும், நகரின் முக்கிய இடங்களில் 52 குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளை மாத்தநாயக்கன்பட்டி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பொறுப்பு ஏற்ற பார்த்தசாரதி, நகர் பகுதியில் செலுத்தப்படாமல் இருந்த ரூ. 13 கோடி வரியில் ரூ. 9 கோடியை வசூல் செய்தார். மேலும், சித்திரை 1 ஆம் தேதி முதல் விருதுநகர் நகராட்சிப் பகுதி குப்பையில்லா பகுதியாக மாற்றப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, நகர் பகுதியில் இருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தையும் அகற்றினார். மேலும், தற்போதுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் வீடுகள், நிறுவனங்கள், கடைகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வாங்க அறிவுறுத்தினார். ஆனால், 242 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணி புரிந்த நிலையில், தற்போது 134 பேர் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களால் தினந்தோறும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை வாங்க முடியவில்லை என கூறப்படுகிறது. ஏற்கெனவே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நகராட்சி சார்பில் கோலமிட்டு எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், இந்த இடங்களில் குப்பைகளைக் கொட்டக்கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் முறையாக குப்பைகளை வாங்காதாதல், தற்போது, நகரின் முக்கிய வீதிகள், சாலைகளில் புதிய இடங்களில் ஆங்காங்கு குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வருகின்றனர்.
இதனால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்து குப்பைகளை வாங்கவோ அல்லது மீண்டும் அதே இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கவோ நகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.