விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விகுதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் மநீம, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என 28 பேர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடம் மாணிக்கம் தாகூருக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகர்சாமிக்கு அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்பட பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அமமுக, நாம் தமிழர் கட்சி, மநீம கட்சி வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை சார்பில் வாக்கு சேகரிக்கப்பட்டது.
ஏப் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின நிர்வாகிகள், தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்றனர். நகராட்சி சாலை, மாரியம்மன் கோயில் வழியாக ஏராளமானோர் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதேபோல், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக அதிமுக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். மாலையில், அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பனுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இப்பகுதியில் காலை முதல் மாலை வரை ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.