ராம்கோ குழும நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 125 ஆவது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவாலயத்தில் ராம்கோ குழும நிறுவனங்களின் தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக பி.ஏ.சி. ஆர் நினைவு இசைப் பள்ளி மாணவர்களின் கீர்த்தனாஞ்சலி நடைபெற்றது. ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களின் தொடர் ஜோதி ஓட்டத்தை ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இருந்து பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து ராஜபாளையம் ராமமந்திரம் அருகேயுள்ள பி.ஏ.சி ராமசாமி ராஜா முழு உருவச் சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நகரில் பல்வேறு பகுதிகளில் பி.ஏ.சி. ராமசாமி ராஜா உருவப் படம் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், ராம்கோ குழும ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.