விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டது. இதில் மாரியம்மன் கோயில் தெரு, முருகன் கோயில் தெரு, தென்வடல் புதுத் தெரு, மேலகாந்தி நகர், பெரியார் நகர், மெஜிகோட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்த போது, தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலைகள் அமைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைக்கும் எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையே சாத்தூர் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக பல்வேறு தெருக்களில் சாலைகள் தோண்டபட்டன.
இதில் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையாததால், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும் பெரியார் நகர், குருலிங்காபுரம், மதுவிலக்கு காவல்நிலையம் செல்லும் சாலை, மெஜிரா கோட்ஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.