விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பிரதானச் சாலையில் பட்டுப்போன நிலையில் உள்ள பெரிய மரத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பந்தல்குடியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் துணைமின்நிலையம் அருகே பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் வறட்சி காரணமாகப் பல மாதங்களுக்கு முன்பு பட்டுப் போய் விட்டது.
இம்மரத்தில் உள்ள பெரிய கிளைகள் சாலையை நோக்கி நீண்டுள்ளன.
இக்கிளைகள் எந்த நேரமும் முறிந்து விழும் வாய்ப்புள்ளதால், இப்பகுதி சாலையைக் கடக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். இந்த மரம் பட்டுப்போய் பல மாதங்களாகியும் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இச்சாலையில் பள்ளி வாகனங்கள் நாள்தோறும் சென்று வருவதால், இந்த மரத்தை விரைவில் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.