விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக மழையின்றி மிகவும் வறட்சியான சூழலும், கடும் வெயிலும் நிலவி வந்தது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து, பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை வழக்கம்போல் கடும் வெயில் நிலவிய நிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மழைக்குப் பின்னர் இதமான குளிர்ந்த காற்று வீசியது. இம்மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.