விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் துணைமாலையம்மன் உடனுறை திருமேனிநாதர் கோயிலில் ஆடித்தபசுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் இந்த ஆண்டு ஆடித்தபசு விழா கடந்த 3 ஆம் தேதி ஆடிப் பெருக்கு தினமான ஆடி 18 ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பின்னர் விழா கொடியேற்றம் மறுநாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரவு குதிரை, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளி ரிஷபம் மற்றும் சேஷ வாகனங்களில் அம்பாள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் 10 ஆம் நாளான புதன்கிழமை காலை அம்பாள் ஆற்றில் நீராடி எழுந்தருளும் காட்சியும், பின்னர் மாலை 6 மணிக்கு குண்டாற்றிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் முழுமலரலங்காரத்தில் அம்பாள், சுவாமி தபசுக்காட்சியில் எழுந்தருளலும் நடைபெற்றது.
இதில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் மேலும் திருச்சுழி சுற்றுவட்ட கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடித்தபசுக் காட்சியை தரிசித்தனர்.