விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 12 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் ரயில்வேபீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார்.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நகராட்சித் துறை, வருவாய்த்துறை, சாலைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் தொடக்கத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. சுமார் 200-க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை கள் குறித்த முழக்கங்களை எழுப்பியவாறு காந்தி சிலையிலிருந்து மாநாடு நடைபெற்ற திருமண மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட்டு, அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய சித்திக் ஐ.ஏ.எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி, மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றுப் பேசினார்.