விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் புறக்காவல் நிலைய சார்பு -ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீஸார் சுந்தரராஜபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தி தப்பிக்க முயன்றாராம். போலீஸார் விரைந்து சென்று அந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அந்த இளைஞர் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் (29) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.