விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்மாய் குடிமராமத்து பணியில் அதிகளவில் மணல் அள்ளப்படுவதாகக் கூறி கிராம மக்கள் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமம் உள்ளது. இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. மேலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இக்கிராம மக்கள் குடம் ரூ.15 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இக்கிராமத்தின் குடிநீராதாரமாக விளங்கும் கண்மாய் பகுதியில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது.
இப்பணியில் ஈடுபடும் நபர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளி வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், குடிமராமத்து பணியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்படுவதாகக் கூறிய கிராம மக்கள் சனிக்கிழமை கண்மாய்க்குள் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்து வந்த காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு அறிவித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. இனிமேல் மணல் அள்ளக்கூடாது.
மேலும் மணல் அள்ளி கண்மாய் பகுதியே பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. எனவே கண்மாய் பகுதியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.