ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீ மாடசாமி கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மேல் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சொக்கர் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்பு மூலவர் சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் சாமக்கொடை என்னும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ராஜபாளையம், சஞ்சீவி நாதபுரம், ராமலிங்கபுரம், அய்யனாபுரம், ஆகிய ஊர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தர்மகர்த்தா பரமசிவம் செய்திருந்தார்.