விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பள்ளி மாணவிகளுக்கு குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளை, திருச்சுழி காவல் நிலைய ஆய்வாளர் அனிதாமற்றும் திருச்சுழி குறுவட்டத் தலைவர் வில்சன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்து தொடக்கி வைத்தனர். இப்போட்டிகளில், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியத்திலுள்ள 50 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 16 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு, ஈட்டி, மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் இறுதிச் சுற்றில், ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு, காவல் ஆய்வாளர் அனிதா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இப்போட்டிகளில் வென்ற மாணவிகள், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, திருச்சுழி குறுவட்டச் செயலரும், உடற்கல்வி ஆசிரியருமான கதிரேசன் செய்திருந்தார்.