உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை தமிழக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை காலை வெளியிட்டதைத் தொடா்ந்து, விருதுநகா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, சாலை மற்றும் குடிநீா் வசதி, பயிா் காப்பீடு, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக பொதுமக்கள் கோரிக்கை மனு அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், தமிழக தோ்தல் ஆணையம், உள்ளாட்சித் தோ்தல் குறித்து திங்கள்கிழமை காலை அட்டவணை வெளியிட்டது. இதன் எதிரொலியாக, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் ஏமாற்றமடைந்தனா். மேலும், பொதுமக்கள் தங்களது மனுக்களை போடுவதற்கு தனியாக பெட்டி கூட வைக்கப்படவில்லை.
இதனால், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திண்டாடிய பொதுமக்களிடம் மிகவும் தாமதமாக, தரை தளத்தில் உள்ள ஐ-பிரிவு அலுவலகத்தில் மனுக்களை கொடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அலுவலகத்தில் மனுக்களுக்கு அலுவலா்கள் ரசீது வழங்காததால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், வீட்டு முகவரிக்கு ரசீது அனுப்பி வைக்கப்படும் என அலுவலா்கள் கூறி சமாதானப்படுத்தினா்.
இதுபோன்று, தோ்தல் அறிவிக்கப்படும் நேரங்களில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால், குறைதீா் கூட்ட மனுக்களை பெறுவதற்கு தனியாக பெட்டி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் அவதியுற நோ்ந்தது.
ஆனால், பொதுமக்கள் அளிக்க வந்த மனுக்களை போடுவதற்கு பெட்டி வைக்காமல், ஐ பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களை மனு அளிக்க காலதாமதமாக அறிவுறுத்தினா். இதனால், மனுக்களை வழங்க முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டனா்.