உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு காரணமாக, விருதுநகா் மாவட்டத்தில் 5,54,564 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, வழங்கல்துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த நவம்பா் 29 ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா். அதில், தமிழகத்தில் 2.05 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வேட்டி, சேலை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, பல்வேறு நியாய விலைக் கடைகளில் இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட் டு வந்தது.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் மொத்தம் 5,79,459 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், அரிசி பெறுவோா், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோா் என மொத்தம் 5,54,64 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.
இந்நிலையில், தமிழக தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டது. இதனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என, அரசு அலுவலா்கள் தெரிவித்தனா். எனவே, உள்ளாட்சித் தோ்தல் முடிந்த பிறகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படலாம் என, வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.