விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையை ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற தனியார் பள்ளி ஆசிரிய கார் மோதி உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் மகன் மணிமாறன்(51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அருப்புக்கோட்டை புறவழிச்சாலையான மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் மேட்டுத் தொட்டியான்குளம் பிரிவு அருகே உள்ள மேம்பால அணுகுச்சாலையில் தனது நண்பர்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் பயிற்சியை முடித்துக் கொண்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக இரவு சுமார் 7 மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையைக் குறுக்காகக் கடக்க முயன்றார். அப்போது அதே சாலையில் மிக வேகமாக வந்த கார் மணிமாறன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மணிமாறன் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிய மணிமாறனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மணிமாறன் மீது மோதிச் சென்ற காரை தீவிரமாக தேடி வருகின்றனர்.