விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இரண்டு முறை மனு கொடுத்தும் மடக்கு குச்சி, கண்ணாடி வழங்க தாமதப்படுத்துவதாக ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான நான், இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்தேன். அதில், எனக்கு அரசு சார்பில் இலவசமாக மடக்கு குச்சி, கண்ணாடி மற்றும் பிரெய்லி கடிகாரம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தேன். ஆனால், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தினர், ஊன்று கோல் மற்றும் கண்ணாடி இருப்பு இல்லை, வந்த பின் தருகிறோம் என தெரிவிக்கின்றனர்.
மேலும், பிரெய்லி கடிகாரம் வேலைக்கு செல்வோருக்கு மட்டுமே வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர். எப்போது கிடைக்கும் என தெரிவித்தால் அலைய தேவையில்லை, இதனால், மிகவும் சிரமமாக உள்ளது. மடக்கு குச்சி இருந்தால் சற்று எளிதாக சிரமமின்றி நடந்து செல்ல முடியும் என்றார்.