விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 100 நாள்களாக மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், நீதிமன்ற விசாரணையை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பத்தில் பலர் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்துப் பட்டாசு ஆலைகளையும் திறக்க வேண்டும். வேலையின்றி தவிக்கும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், லெட்சுமி, மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.