விருதுநகர் இந்திரா நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லாததால் அணுகு சாலைப் பகுதியை பெண்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையின் குறுக்கே சாத்தூர் செல்லும் நான்கு வழிச் சாலை உள்ளது. இப்பகுதியில் கிழக்குப் பாண்டியன் காலனி, மேற்கு பாண்டியன் காலனி, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில், இந்திரா நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. மேலும் கிழக்குப் பாண்டியன் காலனி பகுதியில் பகல் நேரத்தில் மட்டுமே சுகாதார வளாகம் செயல்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள், இயற்கை உபாதைகளுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலை அருகே உள்ள அணுகு சாலையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொது மக்கள் நலன் கருதி இந்திரா நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.