சாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் இருந்து ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை கடந்து தான் தினமும் ராமலிங்காபுரம், மணியம்பட்டி, சந்தையூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இப்பகுதியினர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் சென்று வருகின்றனர். ஆனால் இவ்வளவு வாகனங்கள் இவ்வழியாகச் சென்ற போதிலும் பாதுகாப்பு கருதி இப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. தடுப்புச் சுவர் என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறையினர் சிறிய தூண் போன்று அமைத்தனர். ஆனால் அது தற்போது உடைந்து தடுப்புச் சுவரே இல்லாத நிலை காணப்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் இப் பகுதியில் சாலையில் விளக்குகள் கூட கிடையாது. இதனால் இப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இப் பாலம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. மேலும் பாலத்தின் மீது சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். பாலத்தின் மீது செல்லும் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.