விருதுநகர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகள், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பேருந்துகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

விருதுநகர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகள், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பேருந்துகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 விருதுநகரில் பஜார் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ் வழியாக கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஏற்கெனவே சென்று வந்தன. இந்நிலையில், நான்கு வழிச் சாலை உருவாக்கப்பட்ட பின், இச்சாலையில் வாகன போக்குவரத்து குறைந்தது. இதையடுத்து, சுமார் 60 அடி அகலம் கொண்ட இச் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக 30 அடியாக சுருங்கியது. மேலும், இப்பகுதியின் இருபுறமும் உள்ள கடைகளின் முன்புறம் ஆக்கிரமித்து மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. இதனால், இவ்வழியே கார் முதலான சிறிய வாகனங்கள் சென்றாலே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக காலை, மாலை வேளைகளில் பள்ளி மற்றும் அரசு வேலைக்கு செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், பஜார் பகுதி வழியாக காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் கடைகளின் முன்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், ஒரு வழிப் பாதையான இச்சாலையில் எதிர்புறமும் வாகனங்கள் வருகின்றன. 
இதனால், பஜார் பகுதியில் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பஜார் பகுதியை ஒரு வழிப் பாதையாக அறிவித்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இரு சக்கர வாகனங்களை தேசபந்து மைதானப் பகுதியில் நிறுத்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com