சுக்கிலநத்தம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th January 2019 06:08 AM | Last Updated : 07th January 2019 06:08 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுக்கிலநத்தம் கிராமத்தில் கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் நான்கு தூண்களும் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால் தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஏற்கெனவே புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், நீர்த்தேக்கத் தொட்டியினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.