சிவகாசியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணிகள், பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை, பி.எஸ்.ஆர்.சாலை உள்ளிட்ட பல சாலைகளில் குழாய் பதித்த பிறகு அதற்காக தோண்டப்பட்ட குழிகளை மண்ணை கொண்டு சரியாக நிரப்பவில்லை.
இதனால் ஒரு பகுதியில் மேடாகவும், மற்றொரு பகுதி தாழ்வாகவும் உள்ளது. மேலும், சாலையில் ஆங்காங்கே கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.