கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்த செங்கோட்டை- தாம்பரம் அந்தியோதயா ரயிலை இயக்க வேண்டும் என சிவகாசி முன்னாள் பாஜக நகர் மன்ற உறுப்பினர் ஜி.ஆறுமுகச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
செங்கோட்டையிலிருந்து பழனி வழியே கோயம்புத்தூர், செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை வழியே சென்னை பயணிகள் ரயில், கொல்லத்திலிருந்து ராஜபாளையம், சிவகாசி வழியே நாகூர் ரயில் ஆகிய ரயில்கள் அகல ரயில் பாதையாவதற்கு முன்பு ஓடிக் கொண்டிருந்தன. பின்னர் இவை ரத்து செய்யப்பட்டன.
தற்போது அகல ரயில்பாதைப் பணி மதுரை- கொல்லம் முடிவடைந்த நிலையில் முன்பு இயக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ள இந்த ரயில்களை
மீண்டும் இயக்க வேண்டும். தற்போது இயக்கப்பட்டு வரும் சென்னை- செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும்.
கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா ரயில் கடந்த ஒரு ஆண்டு காலமாக இயக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த ரயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு சமர்ப்பிக்கும் நிதி நிலை அறிக்கையில், முன்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்த ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களை இயக்க
வேண்டும்.
அத்துடன் செங்கோட்டை- ஈரோடு ரயிலும் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் நலன் கருதி ரயில்வே துறை இந்த ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.