விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் சேதுபுரம் கிராமத்தில் சேதமடைந்து முறிந்து விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள சேதுபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கான்கிரீட் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. இதில் குறிப்பாக சேதுபுரம் கிராமத்தை ஒட்டிச் செல்லும் குண்டாற்றின் வடக்குப் பகுதி கரையோரத்தில் உள்ள மின்கம்பம் அதன் அடிப்பாகம் முதல் உச்சி வரை கடுமையாகச் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் கான்கிரீட் பெயர்ந்த நிலையில் உள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் துருப்பிடித்துள்ளன.
இதனால் இந்த மின்கம்பம் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. உயரழுத்த மின்சாரம் காரணமாக விபத்து நடைபெறும் அபாயமும் உள்ளதால் இப்பகுதியைக் கடந்து செல்ல பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கிராமத்தினர் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே பெரிய விபத்துக்கள் நேரும் முன்னர் விரைந்து இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.