சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை கலைப் பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் கலைப் பொருள் சேகரிப்பாளர் ஐ.கே.ராஜராஜன் சேகரித்திருந்த பொருள்கள் இடம் பெற்றிருந்தன. இதில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் அக்பரின் தாத்தா காந்தல்லாஜபைனா காலத்து வெள்ளி நாணயங்கள், ராஜராஜன், கிருஷ்ணதேவராயர் , அக்பர் காலத்து தங்க நாணயங்கள், பழங்காலத்து பெண்களின் மண், சங்கு வெள்ளி அணிகலன்கள், ராஜேந்திர சோழன் மற்றும் கட்டபொம்மன் காலத்து ஆயுதங்கள், 650 ஆண்டு பழமையான கலைநயமிக்க காமாட்சி பலகை உள்ளிட்ட மரச்சாமான்கள், சங்க கால மண்ஓடுகள், மூலிகையினால் வரையப்பட்ட சுவாமி படங்கள், குழந்தைகள் விளையாடும் பொருள்கள், கலைநயமிக்க தட்டுக்கள், உணவினை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் மன்னர் காலத்து குடுவை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து ஐ.கே.ராஜராஜன் கூறியதாவது: தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் சிறு அருங்காட்சியகம் அரசு தொடங்கினால், அதில் பயிலும் மாணவர்கள் பழைய பொருள்களை அந்த அருங்காட்சியத்தில் வைத்து சேகரிப்பார்கள். இதனால் வரும் கால சந்ததியினர் வரலாற்றினை எளிதில் புரிந்து கொள்ள உதவும். மாணர்களுக்கும் வரலாறு குறித்து ஆர்வம் வளரும் என்றார்.