மருத்துவ படி வழங்கக் கோரி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பணியாளர்கள் தலைமை அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். இதில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப் படி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2018 முதல் மருத்துவப் படி வழங்குவதை பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிறுத்தியது. இதனால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை, நிலுவைத் தொகையுடன் மத்திய அரசு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.பி.டி.பி.ஏ சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில உதவித் தலைவர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.