ஸ்ரீவில்லிபுத்தூரில் நீர்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முன்னாள் படை வீரர்கள் நலச்சங்க கட்டடத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை இடித்து அகற்றினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் 106.4 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இக் கட்டடம் நீர்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் பெரியார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பெருமாள்சாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணா, புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நீர்வழி புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முன்னாள் படைவீரர்கள் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தை ஜூலை 15 -க்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, துணை வட்டாட்சியர் பார்வதி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் போலீஸார் பாதுகாப்புடன் புதன்கிழமை மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டத்தை இடித்து அகற்றினர்.
இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.