விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை தனியார் பராமரிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலம் முன் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவர் கருமலை தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாலைகளை 5 ஆண்டுகள் பராமரிப்பு செய்ய அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சுமார் 642 கி.மீ. நீளமுள்ள சாலைகளை பராமரிக்க ரூ.200 கோடி மட்டுமே செலவாகும். ஆனால், விருதுநகர் கோட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு ரூ.611.98 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனத்திற்கு ரூ.311.98 கோடி லாபம் சேர்க்கும் வகையில் இத்திட்டம் உள்ளது. எனவே, தனியாரிடம் பராமரிப்புப் பணியை நீண்ட கால ஒப்பந்தம் விடும் கொள்கை முடிவை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டச் செயலர்கள் வி.பழனியப்பன், எஸ்.வேல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஆ.செல்வம், மாநில பொதுச் செயலர் அம்சராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏராளமான சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.