சிவகாசி ஆனையூரில் பெரியகுளம் கண்மாய்க்கான, நீர்வரத்து கால்வாயில் கொட்டியுள்ள மண்ணை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் தினகரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
சிவகாசி பசுமை மன்றம் சார்பில் பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணியும், நீர்வரத்துக் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடந்து ஆனையூரிருந்து விளாம்பட்டி சாலை வழியே பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் நிலை குறித்து சிவகாசி கோட்டாட்சியர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார். ஆனையூரில் உள்ள கண்மாய் நிறைந்து அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் , விளாம்பட்டி சாலையில் உள்ள நீர்வரத்து கால்வாயில் இணைந்து பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும்.
இந்நிலையில் ஆனையூர் கண்மாய் பகுதி, அதிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய்களில் பல இடங்களில், மண்ணை கொட்டி அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோட்டாட்சியர், நில அளவையரைக் கொண்டு, கால்வாயை அளவீடு செய்தார். இதனைத்தொடர்ந்து கால்வாயில் கொட்டப்பட்ட மண்ணை அகற்ற உத்தரவிட்டார். அப்போது சிவகாசி பசுமை மன்ற நிர்வாகிகள் ரவி அருணாசலம், விவேகானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.