விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரியும், பஞ்சுமூட்டை ஏற்றி வந்த சரக்கு வேனும் வெள்ளிக்கிழமை நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
பரமக்குடியிலிருந்து விருதுநகர் சந்தைக்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டி சாலை விலக்கில் சென்று கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றானிலிருந்து இளையான்குடி நோக்கி சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி, எதிர்பாராவிதமாக வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் பரமக்குடி ஏ.புத்தூரைச் சேர்ந்த கோபால்சாமி(34) மற்றும் முருகேசன் (25) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி காவல்துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக திருச்சுழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.