விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
நரிக்குடி அருகே இருஞ்சிறை செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்பாணி(49). விவசாயியான இவர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றி அவரது கால் மற்றும் கைவிரல்களையும் கடித்துள்ளது.
அப்போது விவசாயி சப்பாணியின்அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டத்திலிருந்தவர்கள் உடனடியாக அங்கு வந்து காட்டுப்பன்றியை விரட்டினர். இதில் பலத்த காயமடைந்த சப்பாணியை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நரிக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காயமடைந்த விவசாயி சப்பாணிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.