விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச நிர்வாகி பால்பாண்டி, ஏஐடியுசி பொதுச் செயலர் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், பட்ஜெட்டில் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை உடனே வழங்க வேண்டும். டீசல் வசூல் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், அரசுப் பணியாளர் சங்க பொதுச் செயலர் ராமசாமி மற்றும் மதிமுக, விசிக, பார்வர்டு பிளாக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.