திருச்சுழி வட்டம் பரளச்சியை அடுத்துள்ள கீழப்பூலாங்கால் கிராமத்தில் வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மாட்டுவண்டிப்பந்தயம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனித்திருவிழாவையொட்டி சிறப்பு மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தினால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இதன்படி சிறிய மாட்டு வண்டிகளுக்கும், பெரிய மாட்டுவண்டிகளுக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 6 பெரிய மாட்டுவண்டிகளும், 10 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. பந்தயத் தூரமாக 10 கிலோ மீட்டர் என வைத்து கீழப்பூலாங்காலில் தொடங்கி, கீழ்க்குடி வழியாக துத்திநத்தம் கிராமத்தில் பந்தயம் நிறைவடைந்தது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு முதல்பரிசாக ரூ20 ஆயிரம், இரண்டாம் பரிசாக 18 ஆயிரம் , மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் என வழங்கப்பட்டது.
இப்போட்டியைக் காண கீழப்பூலாங்கால், பரளச்சி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் திரளான மக்கள் வந்திருந்து ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.