சிவகாசியில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் வெள்ளிக்கிழமை இரவு அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி வேலாயுதம் சாலையில் ஒரு ஆப்செட் அச்சகத்தின் அருகே தனியார் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் இரவு சுமார் 10 மணிக்கு அபாய மணி ஒலித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் சார்பு ஆய்வாளர் செண்பகவேலன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்த ஏ.டி.எம்.மிற்கு காவலாளி இல்லை எனவும், இதுபோன்ற அபாய மணி கடந்த சில நாள்களாக ஒலிப்பதாகவும், அச்சகத்தில் உள்ள காவலாளி ராமசாமி போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார், அபாயமணிக்கு செல்லும் மின்சார வயரை வெட்டி விட்டனர்.
இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை வங்கி மேலாளரிடம் விவரம் தெரிவித்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தினர்.