இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இக்கோயிலுக்கு ஆடி மாத இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கோமதிதாய் (50) சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அருகில் இருந்த பெண் கோமதிதாய் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை அறுத்துள்ளார்.
இதைக் கண்ட கோமதிதாய் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து கோயில் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் பழனியைச் சேர்ந்த செல்வி (46) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருக்கன்குடி போலீஸார் செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.