விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வான்முகில் தொண்டு நிறுவனம் இணைந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் எதிர்ப்பு முறை தினத்தை புதன்கிழமை அனுசரித்தன.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆ. முத்துசாரதா தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது: குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகளை வேலைகளுக்கு அனுப்புவது குற்றம் என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடம் வரவேண்டும். இது குறித்த விழிப்புணர்வை பள்ளி பருவத்திலேயே மாணவ-மாணவியரிடம் எடுத்துரைக்கவே, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு முறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி ஜெ. கிறிஸ்டல் பபிதா சிறப்புரையாற்றினார்.
வான்முகில் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அருள், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர், பள்ளிச் செயலர் வண்ணமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, வான்முகில் திட்ட இயக்குநர் முனியராஜ் வரவேற்றார். கள ஒருங்கிணைப்பாளர் மு. அனிதா நன்றி கூறினார்.